Articles by admin

You are currently browsing admin’s articles.

ஆதியிலே பாடப்புத்தகங்களே இல்லாத காலம் ஒன்று இருந்தது. வரலாற்றின் ஒரு புள்ளியில்தான் பாடப்புத்தகம் வந்தது. சிலபஸ் எனப்படும் பாடத்திட்டமும் கூட வரலாற்றின் துவக்கத்தில் இருந்ததில்லை. மனிதகுலம் வர்க்க சமூகமாகப் பிளவுண்ட பிறகே ஆளும் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பைச் சுரண்டுவதற்கு ஒப்புதல் தரும் வண்ணம் உழைக்கும் வர்க்கத்தின் மனங்களைத் தகவமைக்க வேண்டிய அவசியம் ஆள்பவர்களுக்கு ஏற்பட்டது. மனிதகுலத்தின் பொதுவான சேகரமான அறிவைத் தனியுடைமை ஆக்கிப் பெருவாரியான மக்களைக் கல்விச்சாலைகளுக்கு வெளியில் வைத்துப் பலகாலம் அறிவையும் அதிகாரத்துக்கான ஒரு சாதனமாக்கிக் கொண்டிருந்து ஆளும் வர்க்கம்.  அதன்மூலம் தான் அறிவில் தாழ்ந்த வர்க்கம் என உழைக்கும் வர்க்கம் ஒப்புக்கொடுக்க நேரிட்டது. இந்தியாவின் ‘சிறப்பான’ சாதியக்கட்டுமானம் கல்வியை காட்டுக்குள்ளே பர்ணசாலை அமைத்துப் பார்ப்பனருக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் மட்டுமெனக் கொடுத்து வந்தது. அதை மீறிய ஏகலைவனின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் வெகுண்டெழுந்த தொழிலாளி வர்க்கத்தின் ‘சாசன இயக்கம்’ தான் முதன் முதலாக அனைவருக்கும் கல்வி வேண்டும் என்கிற முழக்கத்தை முன்வைத்தது. அது உலகெங்கும் பரவியது. தொழிற்புரட்சி ஏற்பட்ட பின்னான காலத்தில் எழுந்த முதலாளி வர்க்கத்துக்கு எந்திரங்களைக் கையாளவும் கணக்குப் பார்க்கவும் தேவையான அடிப்படைக்கல்வி பெற்ற ஒரு உழைக்கும் கூட்டம் தேவைப்பட்டது. ஆளும் வர்க்கத்தின் இத்தேவையைக் காலந்தோறும் பூர்த்தி செய்ய ஆளும் வர்க்கத்தின் அரசுகள் பாடத்திட்டகளையும் கற்பிக்கும் முறைமைகளையும் மாற்றிக் கொண்டே வந்ததுதான் கல்வியின் வரலாறும் கல்வியின் அரசியலும் ஆகும்.

Read the rest of this entry »

Tags: , ,

எளிய தமிழ் அலங்காரமற்ற இயற்கையான தமிழ் – சகமனிதனோடு நாம் தினசரி பேசிப் பழகும் தமிழ் மதிப்பிழந்து நிற்பது நமது பண்பாட்டின் நேர்மை குறித்த பிரச்சினைகளில் ஒன்று.

பாராட்டு மேடைப் பக்கம் திரும்பினால், கொண்டாட்டத் தமிழ்..! கூஜாத் தமிழ்.
தொலைக்காட்சியில், சிதைவுண்ட தமிழ்..!

தீவிர இலக்கிய உலகில், முடிச்சு விழுந்து சிக்குண்ட தமிழ்..!

பிள்ளைகளின் பாடப்புத்த உலகில் – ஓர் அகங்காரத் தமிழ்..!

தமிழின் மீது உண்மையாகப் பற்று கொண்டவரிடம் இருந்து பல கேள்விகள் பிறக்கின்றன.  கோடிக்கணக்கான சாதாரண மனிதனின் தமிழ் எது? அவனைத் தூக்கி நிறுத்தும் தமிழ் எது? விரிவான உலகை அவனுக்குப் பிரியமாய் அறிமுகம் செய்யும் தமிழ் எது?

உலகின் கவனத்தை நம் பக்கம் திரும்ப வைக்கும் ஆய்வுத் தமிழ் ஏன் வளரவில்லை..? ஆய்வுத் தமிழைப் பின்னுக்குத் தள்ளி ஆர்ப்பாட்டத் தமிழ் ஏனிப்படி வெளிச்சமும் சத்தமுமாய்த் திரிகிறது..? ஓர் அரசாங்கத்துக்கு இதிலென்ன இவ்வளவு ருசி..?

Read the rest of this entry »

Tags: ,

பகிர்தல் – ஜனநாயக வகுப்பறையின் அடிப்படை.

பகிர்தல் – இங்கு கருத்துப் பகிர்வு; பகிர்தல் என்பது பங்கேற்பு.

இன்னும் சற்று விளக்குவதானால், ஒவ்வொரு குரலுக்கும் வாய்ப்பு; மிக முக்கியமாக – ஆசிரியர் குரலை எதிர்க்கும் குரல்களுக்கும் வாய்ப்பு.

எந்தத் தலைப்பில் ஆசிரியர்களிடம் உரையாடினாலும், “பேசவிடுங்கள்” என்றொரு உபதலைப்பு எடுத்து என் எண்ணங்களைக் கொட்டுவதுண்டு, எதிர்வினைகள் பல மாதிரி இருந்திருக்கின்றன. உடன்படுபவர்கள்தான் அதிகம். ஆனால் நிச்சயம் ஒரு ‘க்’கன்னா இருக்கும்.

“பேச விடலாம். ஆனா… என்னத்தப் பேசுவான்? உளறிக் கொட்டுவான்?”

“பேச விடலாம் சார்! நல்லது தான். ஆனா சிலபஸ் யார் முடிக்கிறது?…”

“நான் பேச விட்டுருக்கேன்! ஆனா புண்ணியம் இல்ல. ஆளுக்கொண்ணு பேசுவான்!…”

“பேசச் சொல்லலாம். தமிழ்’ல முடியும்; ஹிஸ்டரி’ல முடியும். மேத்ஸ் கிளாஸ்ல என்ன சார் பேசுவான்?…”

“நல்ல யோசனை! பேச வைச்சா அவனுக்கும் பாடத்தில ஈடுபாடு வரும். நான் முயற்சி செஞ்சிருக்கேன். ஆனா அவனுடைய ஒத்துழைப்பு போதுமானதா இல்ல!”

Read the rest of this entry »

Tags: , ,

(அறிவொளி இயக்க அனுபவங்கள் குறித்து ச.தமிழ்ச் செல்வன் அவர்கள் எழுதிய “இருளும் ஒளியும்” புத்தகத்திற்கு ச.மாடசாமி அவர்கள் எழுதிய அணிந்துரை)

கண்கள் கூர்மை அடைந்திருக்கின்றன. மொழிக்குள் ஒளிந்து கிடக்கும் அதிகாரம் கர்வம், காமம், பசப்பு போன்ற அமுங்குணிக்கள்ளர்களைக் கண்கள் சுலபத்தில் கண்டுபிடித்து விடுகின்றன. மொழியும் பதிலுக்குப் பதுங்கத்தான் செய்கிறது. கள்ளர்களை இன்னும் ரகசியமாய் மறைக்கிறது. மனப்பகிர்வும் சரி – உறவாடல்களும் சரி – திட்டமிட்ட, தயாரிக்கப்பட்ட மொழியில் நடக்கிறது. திட்டமிட்ட மொழியில் திரைகள் அதிகம். ஆனால், திட்டமிட்டது தெரியாதபடி வார்த்தைகளில் ஒரு அப்பாவித் தோற்றம்! யப்பாடி! மொழியை இயற்கையாக முன்வைக்கத் தேவைப்படும் செயற்கையான உழைப்பில், எழுதுபவனுக்கும் படிப்பவனுக்கும் மூச்சு வாங்குகிறது. வாசிப்பு கனக்கிறது.

அறிவொளி அனுபவப் பகிர்வான ‘இருளும் ஒளியும்’ மொழி உண்டாக்கும் நெருக்கடிகளிலும், இடுமுடுக்குகளிலும் சிக்கிக் கொள்ளாமல் வந்திருப்பது என் முதல் சந்தோசஷம். இதில் உள்ள மொழி ‘திட்டமிடாத மொழி’ என்பது மட்டுமல்ல; அறிவொளிக் காலத்தில் மறைத்து மறைத்து, ரகசியக் குரல்களில் நாங்கள் பேசியவற்றை எல்லாம் ‘அவுத்து விடுகிற’ (தமிழ்ச் செல்வனின் பாதிப்பு) வெளிப்படை மொழியாகவும் இருக்கிறது.

“தலையில் சிலேட்டுகளுடன் ஒத்தையடிப் பாதையில் லொங்கு லொங்கு என்று ஓடியபடியே எங்கள் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருந்தன” என்று தமிழ்ச்செல்வன் எழுதிய வரிகளில், அறிவொளிப் பயணத்தின் சுகமும், சுமையும் நிமிட நேரத்தில் உயிர் பெற்று எழுந்துவிட்டன. ஒரே சமயத்தில் புன்சிரிப்பையும், கண்ணில் ஞாபக ஈரத்தையும் கொண்டு வந்து சேர்த்த வரிகள் இவை.

Read the rest of this entry »

Tags: ,