ஆர்ப்பாட்டங்கள் நுட்பங்களைத் தோற்கடிக்கின்றன. ஆர்ப்பாட்டத்துக்கு அகலமான வாய். இங்கு வார்த்தைகளைவிட வாய்தான் முக்கியம்.

மேலும், கூசி ஒதுங்கும் நுட்பங்களை விழுங்குவது சுலபமானதும் கூட.

நான் கல்லூரிப் பணியில் சேர்ந்த புதிதில் – சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் – அதுவரை எனக்குக் கிட்டாத கௌரவங்கள் பல அப்போது கிட்டின. எனக்குச் சுத்தமாகப் பிடிக்காத என் பேர் சுருக்கப்பட்டு நான் எஸ்.எம் சார் ஆனேன். பக்கத்து ஊர்த் திருவிழாக்களில் பேச அடிக்கடி அழைப்பு வந்தது. மாணவர் போட்டிகளின் போது நடுவராக இருந்து தீர்ப்பு சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. இப்படிப் பல.

பேச்சுப் போட்டி ஒரு விதத்தில் விளையாட்டுப் போட்டி மாதிரி. படிப்பில் பிரகாசிக்காத மாணவர்களும் கூட அந்த மேடையில் ஜொலிப்பார்கள்.

நான் பணியில் சேர்ந்த புதிதில் சுப்பிரமணியன் என்ற மாணவன் பேச்சுப் போட்டியில் பரிசை அள்ளிக் கொண்டு இருந்தான். எந்தத் தலைப்பாக இருந்தாலும் ‘வக்கற்றோர் வகையற்றோர் திக்கற்றோர் திசையற்றோர்’ என்றுதான் பேச்சைத் தொடங்குவான். உடனே கைதட்டல் மழை தொடங்கும். ’இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்’ என்று மறக்காமல் ஒரு இடத்தில் சொல்வான். ‘வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லி’ முடிப்பான். கை குவித்து வணக்கம் சொல்வான். கட்டாயம் ஜெயிப்பான்.

அவனுடைய வெற்றி என்னைச் சிரமப்படுத்திக் கொண்டிருந்தது உண்மை.

Read the rest of this entry »

அது ஒரு பாரம்பரியமான பள்ளி. தொடங்கி 50 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் அங்கு படித்தார்கள். ஏறக்குறைய நூறு ஆசிரியர்கள் பணியில் இருந்தார்கள். அந்த ஆசிரியர்கள் மத்தியில் பேச ஒரு நாள் அழைப்பு. போயிருந்தேன்.

கட்டுதிட்டங்கள் கூடுதலாக இருந்தன. ஆசிரியர் முகச் சலனங்கள் குறைவாக இருந்தன. நடப்பது நடக்கட்டும் என உரையாடினேன். உரையின் இறுதியில் ஒரு கேள்வியை முன் வைத்தேன். ”சட்டென்று நம் எதிரே வந்து நிற்பார்கள். நம் கவனத்தைக் கவர்வார்கள். அந்த மாணவர்களைக் கண்டுபிடித்து விடுவோம். கண்பார்வையில் இருந்து விலகி தூரமாய்ப் போய் நிற்பார்கள் பலர். அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி நீங்கள் கண்டுபிடித்த மாணவர் யார்? அவரைப் பற்றி இக் கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்றேன்.

உடனே எழுந்தார் ஒருவர். ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவனிடம் இருந்த அபூர்வமான கலைத்திறன் தன் கவனத்துக்கு வந்த விதத்தை விளக்கினார். ரசித்தேன். சிறு நோட்டைத் திறந்து வைத்துக் கொண்டு அடுத்தவரின் அனுபவத்தைப் பதிவு செய்யக் காத்திருந்தேன். அடுத்தவரை எழுப்ப ‘சொல்லுங்க! சொல்லுங்க!’என்று கேட்டு நெக்குருக வேண்டியிருந்தது. இருவர் எழுந்தார்கள். கேட்டுக் கொண்டதற்காகப் பேசினார்கள். கடைசியாக ஒருவர் எழுந்து வேறு தளத்துக்கு உரையாடலைக் கொண்டு போனார். அதற்குப் பிறகு யாரும் எழவில்லை. நோட்டை மூடி வைத்துவிட்டு ஏமாற்றத்தைக் காட்டாமல் ’கூட்டத்தை முடிக்கலாம்’ என்றேன். உடனே கூட்டம் புத்துயிர் பெற்றது. காற்று வீசியது. முகங்களில் பரவச அலைகள்!

Read the rest of this entry »

குறிப்பு: சென்னையில், ஜனவரி 19,20,21 நாட்களிலும் 27,28,29 நாட்களிலும் ‘கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்’ குறித்து ‘ஆசிரியர் பயிற்சி கல்வி ஆராய்ச்சி இயக்ககம்’ பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்க்கு விவாத மேடைகளை அமைத்தது. பேராசிரியர்கள் ச.மாடசாமி, கே.ராஜு, எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், அ.வெண்ணிலா, மு.முருகேஷ், முத்துநிலவன், அறிவியல் இயக்க நண்பர்கள் அமலராஜன், ரத்தின விஜயன் ஆகியோர் விவாத மேடைகளில் பங்கேற்று கருத்துக்கள் வழங்கினர். அது தருணம், ஆசிரியர்க்கு வழங்கப்பட்ட கருத்துத் தாள்களில் ஒன்று இது.

கற்பனை – நம்பிக்கையும் உண்மையும்

கற்பனை என்பது அபூர்வமானது; அது ஒரு வரப்பிரசாதம்; அது ஒரு சிலருக்கே சாத்தியமானது; ஒருவரிடத்தில் இயல்பாய் அமைந்தது அது; தனித்து ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போதுதான் ஒருவரிடம் கற்பனை உண்டாகிறது – போன்றவை கற்பனை குறித்து நம்மிடம் இருக்கும் சில கருத்துக்கள்.

இவற்றை நம்பிக்கைகள் எனலாம். இவை உண்மைகள் இல்லை.

கற்பனை ஒவ்வொருவரிடமும் இருக்கிறது; ஒவ்வொருவரிடமும் பிறக்கிறது.

ஒவ்வொருவரையும் கற்பனையாளராக மாற்றவும் முடியும். பயிற்சி அளித்து உருவாக்கக் கூடிய திறன் தான் அது (A skill that can be learnt). தனித்த பொழுதுகளில் தோன்றுவது மட்டுமல்ல கற்பனை. கூடிப் பேசும் போதும், கூடிச் சிந்திக்கும் போதும், கூடி விளையாடும் போதும் கற்பனை பொங்கிப் பெருகுவது உண்டு.

கற்பனை – இலக்கியம், மேடை, வகுப்பறை சார்ந்த திறன் மட்டுமன்று. அது எங்கெங்கும் இருக்கிறது.

சமையல் கூடங்களில் தோன்றாத கற்பனையா? விளையாட்டு மைதானங்களில் உருவாகாத கற்பனையா? படகு செலுத்தும் கைகளிலும், பூ தொடுக்கும் விரல்களிலும் இல்லாத கற்பனையா?

சிறு விலகல்

இங்கு ‘கற்பனை’ எனப் பேசுவது, காப்பியம் எழுதும் ஆற்றலை அல்ல. நாம் எதிர்பார்ப்பது ஒரு சிறு விலகலைத்தான். பழகித் தேய்ந்த வகுப்பறைப் பாதையிலிருந்து – சிறு விலகல்.

Read the rest of this entry »

Tags: ,

ஒரு கூட்டம் கூடியதுமே “இது ஓர் இயக்கம்” என்ற கர்ச்சனை கிளம்பி விடுகிறது. இயக்கம் என்பதைக் கூட்டம் என்று புரிந்து கொள்வது பொது இயல்பு. இயக்கம் என்பதற்கு மேலும் பல பொருள்கள் உண்டு. மிக முக்கியமாக “நகர்வது” என்ற பொருள் அதற்கு இருக்கிறது. (இயங்குவது என்ற பொருளில் இருந்து இது சற்று வேறுபட்டது)

நகர்வு – யாரிடமிருந்து யாரை நோக்கி? இந்தக் கேள்வி முக்கியமானது. இந்தக் கேள்வியின் தொடர்ச்சிதான் கூட்டமா? இயக்கமா? என்பதுவும்.

உதாரணங்களின் மூலம் விளக்கப் பார்ப்போம். மத்திய வர்க்க, உயர்மத்திய வர்க்க ஆண் அறிவாளிகளின் மூளையில் உதித்த சில அமைப்புகள் பெண்கள் இயக்கம் என்ற பெயரைப் பெற்றதுண்டு. தொடக்கம் இப்படி அமைவதில் தவறில்லை. மெல்ல மெல்ல ஆண் அறிவாளிகளின் கையில் இருந்து இயக்கத்தின் கருப்பொருள் உருவாக்கம் பங்கேற்கும் பெண்கள் கைக்கு நகர்ந்தால்தானே அது இயக்கம்! பெண்களைத் திரட்டுவதால் மட்டும் பெண்கள் இயக்கமா?

அறிவொளி இயக்கம் மிகப் பெரிய மக்கள் இயக்கங்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. அறிவொளி இயக்கத்திற்கான கருப்பொருள் – அறிவாளிகள் மூளையில் உதித்ததுதான். கற்கும் பொருள்கள் (Learning Materials) அனைத்தும் படிப்பாளிகளால் உருவாக்கப்பட்டவை. மத்திய வர்க்கத்தின் புழக்கத்தில் இருந்த வார்த்தைகளை எடுத்து, எடுத்துத் தயாரிக்கப்பட்ட முதனூல்களோடு (Primers) அறிவொளியில் பாடம் தொடங்கப்பட்டது. இப்படித்தான் தொடங்க முடியும் – அரைகுறையாக, அவசர கோலமாக தொடக்கம்தான் முக்கியம்; முழுமையாக இருப்பது அல்ல. மக்களோடு அமர்ந்து மக்கள் பேசும் வார்த்தைகளைக் கண்டுபிடித்துத் தொகுத்து, கற்கும் நூல்களை உருவாக்குவதற்கான பொறுமையும், அவகாசமும், தெளிவும் தொடக்கத்தில் இல்லை.

ஆனால் அறிவொளியில் நகர்வு இருந்தது. படிப்பாளிகள் தயாரித்த பாடப் புத்தகச் சுமை தாங்காமல், அறிவொளி மையங்கள் நொறுங்கிய போது தெளிவு பிறந்தது. மக்கள் சொன்ன கதைகள், விடுகதைகள், சொலவடைகள் ஆகியவற்றைச் சேகரித்துப் பாடப் புத்தகமாக்கி மீண்டும் மக்களை அழைத்து அவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த முடிந்தது. அறிவொளிப் பாடநூல்களின் மொழி கூட படிப்படியாக மாற்றம் அடைந்தது. கருப் பொருள் உருவாக்கத்தில், கற்போரின் பங்கு பெறுவது முன்னெப்போதும் நிகழ்ந்திராத மகத்தான நகர்வு அல்லவா? அறிவொளி மையத்தில் கற்பித்தலும் இருபக்க உரையாடலாகவே நடந்தது.
கற்போர் – கற்பிப்போருக்கு இடையிலான நெருக்கம் நம் வகுப்பறைகளில் காணமுடியாத அரிய காட்சி. ஆசிரியத் தன்மை குறைந்த வகுப்பறைகளாக அறிவொளி மையங்கள் திகழ்ந்தன.

Read the rest of this entry »

Tags: ,

ஆதியிலே பாடப்புத்தகங்களே இல்லாத காலம் ஒன்று இருந்தது. வரலாற்றின் ஒரு புள்ளியில்தான் பாடப்புத்தகம் வந்தது. சிலபஸ் எனப்படும் பாடத்திட்டமும் கூட வரலாற்றின் துவக்கத்தில் இருந்ததில்லை. மனிதகுலம் வர்க்க சமூகமாகப் பிளவுண்ட பிறகே ஆளும் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பைச் சுரண்டுவதற்கு ஒப்புதல் தரும் வண்ணம் உழைக்கும் வர்க்கத்தின் மனங்களைத் தகவமைக்க வேண்டிய அவசியம் ஆள்பவர்களுக்கு ஏற்பட்டது. மனிதகுலத்தின் பொதுவான சேகரமான அறிவைத் தனியுடைமை ஆக்கிப் பெருவாரியான மக்களைக் கல்விச்சாலைகளுக்கு வெளியில் வைத்துப் பலகாலம் அறிவையும் அதிகாரத்துக்கான ஒரு சாதனமாக்கிக் கொண்டிருந்து ஆளும் வர்க்கம்.  அதன்மூலம் தான் அறிவில் தாழ்ந்த வர்க்கம் என உழைக்கும் வர்க்கம் ஒப்புக்கொடுக்க நேரிட்டது. இந்தியாவின் ‘சிறப்பான’ சாதியக்கட்டுமானம் கல்வியை காட்டுக்குள்ளே பர்ணசாலை அமைத்துப் பார்ப்பனருக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் மட்டுமெனக் கொடுத்து வந்தது. அதை மீறிய ஏகலைவனின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் வெகுண்டெழுந்த தொழிலாளி வர்க்கத்தின் ‘சாசன இயக்கம்’ தான் முதன் முதலாக அனைவருக்கும் கல்வி வேண்டும் என்கிற முழக்கத்தை முன்வைத்தது. அது உலகெங்கும் பரவியது. தொழிற்புரட்சி ஏற்பட்ட பின்னான காலத்தில் எழுந்த முதலாளி வர்க்கத்துக்கு எந்திரங்களைக் கையாளவும் கணக்குப் பார்க்கவும் தேவையான அடிப்படைக்கல்வி பெற்ற ஒரு உழைக்கும் கூட்டம் தேவைப்பட்டது. ஆளும் வர்க்கத்தின் இத்தேவையைக் காலந்தோறும் பூர்த்தி செய்ய ஆளும் வர்க்கத்தின் அரசுகள் பாடத்திட்டகளையும் கற்பிக்கும் முறைமைகளையும் மாற்றிக் கொண்டே வந்ததுதான் கல்வியின் வரலாறும் கல்வியின் அரசியலும் ஆகும்.

Read the rest of this entry »

Tags: , ,

எளிய தமிழ் அலங்காரமற்ற இயற்கையான தமிழ் – சகமனிதனோடு நாம் தினசரி பேசிப் பழகும் தமிழ் மதிப்பிழந்து நிற்பது நமது பண்பாட்டின் நேர்மை குறித்த பிரச்சினைகளில் ஒன்று.

பாராட்டு மேடைப் பக்கம் திரும்பினால், கொண்டாட்டத் தமிழ்..! கூஜாத் தமிழ்.
தொலைக்காட்சியில், சிதைவுண்ட தமிழ்..!

தீவிர இலக்கிய உலகில், முடிச்சு விழுந்து சிக்குண்ட தமிழ்..!

பிள்ளைகளின் பாடப்புத்த உலகில் – ஓர் அகங்காரத் தமிழ்..!

தமிழின் மீது உண்மையாகப் பற்று கொண்டவரிடம் இருந்து பல கேள்விகள் பிறக்கின்றன.  கோடிக்கணக்கான சாதாரண மனிதனின் தமிழ் எது? அவனைத் தூக்கி நிறுத்தும் தமிழ் எது? விரிவான உலகை அவனுக்குப் பிரியமாய் அறிமுகம் செய்யும் தமிழ் எது?

உலகின் கவனத்தை நம் பக்கம் திரும்ப வைக்கும் ஆய்வுத் தமிழ் ஏன் வளரவில்லை..? ஆய்வுத் தமிழைப் பின்னுக்குத் தள்ளி ஆர்ப்பாட்டத் தமிழ் ஏனிப்படி வெளிச்சமும் சத்தமுமாய்த் திரிகிறது..? ஓர் அரசாங்கத்துக்கு இதிலென்ன இவ்வளவு ருசி..?

Read the rest of this entry »

Tags: ,

பகிர்தல் – ஜனநாயக வகுப்பறையின் அடிப்படை.

பகிர்தல் – இங்கு கருத்துப் பகிர்வு; பகிர்தல் என்பது பங்கேற்பு.

இன்னும் சற்று விளக்குவதானால், ஒவ்வொரு குரலுக்கும் வாய்ப்பு; மிக முக்கியமாக – ஆசிரியர் குரலை எதிர்க்கும் குரல்களுக்கும் வாய்ப்பு.

எந்தத் தலைப்பில் ஆசிரியர்களிடம் உரையாடினாலும், “பேசவிடுங்கள்” என்றொரு உபதலைப்பு எடுத்து என் எண்ணங்களைக் கொட்டுவதுண்டு, எதிர்வினைகள் பல மாதிரி இருந்திருக்கின்றன. உடன்படுபவர்கள்தான் அதிகம். ஆனால் நிச்சயம் ஒரு ‘க்’கன்னா இருக்கும்.

“பேச விடலாம். ஆனா… என்னத்தப் பேசுவான்? உளறிக் கொட்டுவான்?”

“பேச விடலாம் சார்! நல்லது தான். ஆனா சிலபஸ் யார் முடிக்கிறது?…”

“நான் பேச விட்டுருக்கேன்! ஆனா புண்ணியம் இல்ல. ஆளுக்கொண்ணு பேசுவான்!…”

“பேசச் சொல்லலாம். தமிழ்’ல முடியும்; ஹிஸ்டரி’ல முடியும். மேத்ஸ் கிளாஸ்ல என்ன சார் பேசுவான்?…”

“நல்ல யோசனை! பேச வைச்சா அவனுக்கும் பாடத்தில ஈடுபாடு வரும். நான் முயற்சி செஞ்சிருக்கேன். ஆனா அவனுடைய ஒத்துழைப்பு போதுமானதா இல்ல!”

Read the rest of this entry »

Tags: , ,

(அறிவொளி இயக்க அனுபவங்கள் குறித்து ச.தமிழ்ச் செல்வன் அவர்கள் எழுதிய “இருளும் ஒளியும்” புத்தகத்திற்கு ச.மாடசாமி அவர்கள் எழுதிய அணிந்துரை)

கண்கள் கூர்மை அடைந்திருக்கின்றன. மொழிக்குள் ஒளிந்து கிடக்கும் அதிகாரம் கர்வம், காமம், பசப்பு போன்ற அமுங்குணிக்கள்ளர்களைக் கண்கள் சுலபத்தில் கண்டுபிடித்து விடுகின்றன. மொழியும் பதிலுக்குப் பதுங்கத்தான் செய்கிறது. கள்ளர்களை இன்னும் ரகசியமாய் மறைக்கிறது. மனப்பகிர்வும் சரி – உறவாடல்களும் சரி – திட்டமிட்ட, தயாரிக்கப்பட்ட மொழியில் நடக்கிறது. திட்டமிட்ட மொழியில் திரைகள் அதிகம். ஆனால், திட்டமிட்டது தெரியாதபடி வார்த்தைகளில் ஒரு அப்பாவித் தோற்றம்! யப்பாடி! மொழியை இயற்கையாக முன்வைக்கத் தேவைப்படும் செயற்கையான உழைப்பில், எழுதுபவனுக்கும் படிப்பவனுக்கும் மூச்சு வாங்குகிறது. வாசிப்பு கனக்கிறது.

அறிவொளி அனுபவப் பகிர்வான ‘இருளும் ஒளியும்’ மொழி உண்டாக்கும் நெருக்கடிகளிலும், இடுமுடுக்குகளிலும் சிக்கிக் கொள்ளாமல் வந்திருப்பது என் முதல் சந்தோசஷம். இதில் உள்ள மொழி ‘திட்டமிடாத மொழி’ என்பது மட்டுமல்ல; அறிவொளிக் காலத்தில் மறைத்து மறைத்து, ரகசியக் குரல்களில் நாங்கள் பேசியவற்றை எல்லாம் ‘அவுத்து விடுகிற’ (தமிழ்ச் செல்வனின் பாதிப்பு) வெளிப்படை மொழியாகவும் இருக்கிறது.

“தலையில் சிலேட்டுகளுடன் ஒத்தையடிப் பாதையில் லொங்கு லொங்கு என்று ஓடியபடியே எங்கள் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருந்தன” என்று தமிழ்ச்செல்வன் எழுதிய வரிகளில், அறிவொளிப் பயணத்தின் சுகமும், சுமையும் நிமிட நேரத்தில் உயிர் பெற்று எழுந்துவிட்டன. ஒரே சமயத்தில் புன்சிரிப்பையும், கண்ணில் ஞாபக ஈரத்தையும் கொண்டு வந்து சேர்த்த வரிகள் இவை.

Read the rest of this entry »

Tags: ,

பள்ளிகளுக்கு வெளியே குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஆசிரியர்களுக்குப் பெரும் பிரச்சனை அவர்களை எவ்வித சேதாரமும் இல்லாமல் சேட்டைகள்  செய்யவிடாமல் கூட்டத்தில் தொலைந்து போய்விடாமல் பத்திரமாகப் பாதுகாத்துத் திரும்பக் கொண்டுவந்து விடுவதுதான். நாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலானாலும் சரி, புகழ்பெற்ற அருங்காட்சியகங்களினாலும் சரி கூட்டமாக கல்விச் சுற்றுலா வரும் குழந்தைகளை (சீருடையுடனே அவர்கள் அழைத்து வரப்படுவார்கள். அப்போதானே தொலைந்து போனாலும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்) அவர்களுடைய மேய்ப்பர்களான ரெண்டு அல்லது மூணு ஆசிரியர்களுடன் பார்க்கலாம். மிருகக் காட்சி சாலைகளில் மிருகங்களின் மீது கற்களைக் குழந்தைகள் எறிவதை ஆசிரியர் பெரும்பாலும் கண்டிப்பதில்லை.

Read the rest of this entry »

Tags: , , ,

கலை உலகம் பற்றியும் ஊடகம் பற்றியும் புதிய ஆசிரியனில் வரும் விமர்சனங்களைக் கவனிக்கிறேன். விமர்சனங்களில் நிதானம் இருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு நிலைகுலையாத – உற்சாகம் கொண்டு சரிந்து விழாத நிதானம்! நவம்பர் இதழில் மதுக்கூர் இராமலிங்கமும் சோழ.நாகராஜனும் ஊடகங்கள் பற்றி எழுதியிருந்தார்கள். வாசகன் உணர்வுப் பூர்வமாய் புரிந்து அங்கீகரிக்கக் கூடிய விதத்தில் பட்டவர்த்தனமாகவும், சுருக் வார்த்தைகளோடும் இருக்கிறது மதுக்கூராரின் எழுத்து (யாருக்கும் வெட்கம் இல்லை). இந்த ஊசி எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கிறது.

Read the rest of this entry »

Tags:

« Older entries