ஆர்ப்பாட்டங்கள் நுட்பங்களைத் தோற்கடிக்கின்றன. ஆர்ப்பாட்டத்துக்கு அகலமான வாய். இங்கு வார்த்தைகளைவிட வாய்தான் முக்கியம்.
மேலும், கூசி ஒதுங்கும் நுட்பங்களை விழுங்குவது சுலபமானதும் கூட.
நான் கல்லூரிப் பணியில் சேர்ந்த புதிதில் – சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் – அதுவரை எனக்குக் கிட்டாத கௌரவங்கள் பல அப்போது கிட்டின. எனக்குச் சுத்தமாகப் பிடிக்காத என் பேர் சுருக்கப்பட்டு நான் எஸ்.எம் சார் ஆனேன். பக்கத்து ஊர்த் திருவிழாக்களில் பேச அடிக்கடி அழைப்பு வந்தது. மாணவர் போட்டிகளின் போது நடுவராக இருந்து தீர்ப்பு சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. இப்படிப் பல.
பேச்சுப் போட்டி ஒரு விதத்தில் விளையாட்டுப் போட்டி மாதிரி. படிப்பில் பிரகாசிக்காத மாணவர்களும் கூட அந்த மேடையில் ஜொலிப்பார்கள்.
நான் பணியில் சேர்ந்த புதிதில் சுப்பிரமணியன் என்ற மாணவன் பேச்சுப் போட்டியில் பரிசை அள்ளிக் கொண்டு இருந்தான். எந்தத் தலைப்பாக இருந்தாலும் ‘வக்கற்றோர் வகையற்றோர் திக்கற்றோர் திசையற்றோர்’ என்றுதான் பேச்சைத் தொடங்குவான். உடனே கைதட்டல் மழை தொடங்கும். ’இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்’ என்று மறக்காமல் ஒரு இடத்தில் சொல்வான். ‘வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லி’ முடிப்பான். கை குவித்து வணக்கம் சொல்வான். கட்டாயம் ஜெயிப்பான்.
அவனுடைய வெற்றி என்னைச் சிரமப்படுத்திக் கொண்டிருந்தது உண்மை.
